சீனாவில் ஆட்சியை மேற்கொண்ட ஒரு மன்னன் உலகத்தின் வரலாறு முழுவதையும் தெளிவாகத் தெரிந்து கொள்ள விரும்பினான். “உலக வரலாறு அனைத்தையும் தெரிந்து கொண்டால் ஞானியாகிவிடலாம்” என்றும் நினைத்தான். அவனது அமைச்சரவையிலிருந்து அறிஞர்களையும், புலவர்களையும் அழைத்தான். உலக வரலாற்றை எழுதித் தரும்படி கட்டளையிட்டான். சில ஆண்டுகள் கழிந்தன.
ஆயிரக்கணக்கான பக்கங்களில் உலக வரலாற்றை எழுதிக்கொண்டு பல அறிஞர்களும், புலவர்களும் வந்தார்கள். நூற்றுக்கணக்கான குதிரை வண்டிகளில் விரிவாக எழுதப்பட்ட உலக வரலாற்றுச் சுவடிகள் கொண்டுவரப்பட்டன. அரண்மனை மண்டபம் முழுவதும் நிரம்பும் அளவுக்கு வரலாற்றுச் சுவடிகள் குவிந்தன.
மன்னன் அதிர்ச்சியடைந்தான். “உலக வரலாறு இவ்வளவு பெரியதா?இவற்றை என்னால் படித்து முடிக்க முடியாது. மிகவும் சுருக்கமாக எழுதித்தாருங்கள்” என்றான் மன்னன். “உண்மையான வரலாற்று நிகழ்ச்சிகளை சுருக்கமுடியாது. அதிகமாக சுருக்கினால் உண்மைகளைத் தெரியமுடியாது” என அறிஞர்கள் சொன்னார்கள்.
“எப்படியாவது நீங்கள் சுருக்கித் தாருங்கள்” என விடாப்பிடியாக விரட்டினான். பயந்துபோன அறிஞர்களும், புலவர்களும் ஒரு குருவை சந்தித்து ஆலோசனை கேட்டார்கள். குரு மன்னனை சந்திக்க நேரில் வந்தார். “உலக வரலாற்றை மிகவும் சுருக்கமாக நான் எழுதித்தருகிறேன்” என்று குரு கூறினார்.
மறுநாள், மன்னனை சந்தித்த குரு ஒரு ஓலையை அவனிடம் நீட்டினார். அந்த ஓலையில்“உலகில் மனிதர்கள்பிறந்தார்கள். வாழ்ந்தார்கள். இறந்துபோனார்கள்” என எழுதப்பட்டிருந்தது. மன்னன் ஆச்சரியமாகப் பார்த்தான். “உலக வரலாற்றை மிகவும் சுருக்கமாக இப்படித்தான் எழுத முடியும்” என்று சொன்னார் குரு மன்னனுக்கு உண்மை புரிந்தது.
“எந்த வெற்றியைப் பெறுவதற்கும் முறையான வழிமுறையும், தேவையான கால அவகாசமும் தேவை” என்பதை மன்னன் புரிந்து கொண்டான் ...
0 கருத்துகள்