ஆசிரியரும் வகுப்பறையும்
ஆசிரியர்கள் தனிமனிதனையும் சமூகத்தையும் முழு உலகினையும் கூட உருவாக்குபவர்களாவர். ஆசான்களின்றி கல்விச் செயன்முறை நடைபெறலாம். ஆனால் பூரணமான முழுமையான கல்வியைப் பெற்றுக் கொள்வது என்பது இயலாத காரியமாகும். ஒரு சிற்பியானவன் எவ்வாறான நுணுக்கங்களைக் கொண்டு சிலை ஒன்றினை செதுக்குகின்றானோ? அது போலவே ஆசிரியரும் சிறந்த எண்ணங்களையும், சிந்தனைகளையும், நுணுக்கங்களையும் கொண்டு ஒரு தனி மனிதனை செதுக்குகின்றார்.
எண்ணங்கள் சிந்தனைகள் நோக்கங்கள் எவ்வளவு சிறந்தனவாக இருப்பினும், நிர்வாகம் எவ்வளவு ஆற்றல் வாய்ந்ததாக இருப்பினும், கற்பதற்கான வளங்கள் எவ்வளவு ஏராளமானதாகவும் காலத்துக்கு ஏற்றனவாகவும் இருப்பினும் அவற்றால் மாணவர்கள் அடையும் பயன் ஆசிரியர்களை பொறுத்தே ஆகும். மாணவர்களின் அறிவு மட்ட வளர்ச்சி ஆசிரியர்களது அறிவு மட்ட வளர்ச்சி என்பவற்றுக்கு உட்பட்டதாகவே இருக்கும் என்ற கோட்பாடும் காணப்படுகின்றது.
![]() |
ஆசிரியரும் வகுப்பறைச் செயற்பாடுகளும் |
வினைத்திறனுடைய ஆசிரியர் ஒருவர் மாணவரின் தேவைகளைக் கனிப்பவராகவும், மாணவர்கள் பிரச்சினைக்கு உள்ளாகும் போது அவர்களை நன்கு புரிந்துகொண்டு செயற்படுபவராகவும் இருக்க வேண்டும். வகுப்பறையில் மாணவர்கள் வெறுமனே கற்பவர்கள் என்ற எண்ணப்பாடின்றி அவர்கள் கற்பதற்கு ஏற்றவகையிலான வசதிகளை உருவாக்கி தொடர்ந்து அவதானிப்பவராகவும் விளங்குதல் ஆசிரியர் மாணவர்களுக்கிடையேயான உறவினை சிறக்கச் செய்யும்.
மாணவர் தமது இளம்பராயத்தில் ஆசிரியரானவர் தமக்கு பிடித்தவராகம், அன்பை பொழிபவராகவும் தம் மீது அக்கறை காட்டுபவராகவும், தம்மை மதிப்பவராகவும் இருக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்பார்கள். பாடசாலைக்கு வரும் ஒவ்வொரு மாணவர்களும் வெவ்வேறு விதமான குடும்ப சூழல், அழுத்தங்கள், பின்னனிகள், சகபாடிகள், வறுமை, மன அழுத்தங்களோடு பாடசாலைக்கு வருகின்றனர். இத்தகைய அழுத்தங்கள் பற்றி அவர்கள் வெளியில் தெரியப்படுத்துவதில்லை. இந்நிலைமையை ஆசிரியரானவர் தாமாக அறிந்து கொள்ளவேண்டியவராக காணப்படுகின்றார். ஆசிரியர் இதன் போது அவர்களது தேவைகளை உணர்ந்து, அவர்களது குறைகளை செவிமடுத்து அதற்கேற்றாற் போல் அவர்களுக்கு வசதி செய்து கொடுப்பராக இருக்க வேண்டும்.
மாணவர்கள் எப்போதும் ஆசிரியரிடம் உயர்ந்தளவு எதிர்ப்பார்ப்புக்களுடன் கூடியவர்களாகக் காணப்படுவார்கள். தற்காலத்தில் கல்வியின் தேவை அதிகரித்து காணப்படுவதுடன் போட்டியும் நிலவுகின்றமையே காரணமாகும். ஆகையினால் ஆசிரியரானவர் எப்போதும் கற்பவராக இருத்தல் அவசியமாகிறது. மாணவர்களின் உயர் எதிர்ப்பார்ப்புக்களுடன் கூடியவர்களாக ஆசிரியர்கள் செயற்படும் பொழுது, மாணவரின் கல்விப் பெறுபேறுகள் அதிகரிக்கும். வீட்டுச்சூழல் பெற்றோருடைய கல்வியறிவு மாணவர்களின் கற்றலில் செல்வாக்குச் செலுத்துகின்ற போதிலும், பாடசலைகளில் ஆசிரியர்கள் வழங்கும் தூண்டுதல்கள் இவற்றை வெற்றி கொள்ள உதவும். வகுப்பறையில் மாணவர்கள் எல்லோரும் வெற்றியடைவீர்கள் என்ற சாதகமான மனப்பான்மையுடனும், நம்பிக்கையோடும் மாணவர்களை செயற்படுத்தும் போது மாணவர்கள் ஆசிரியர்கள் மீது கொண்டுள்ள எதிர்ப்பார்ப்புக்கள் வெற்றித்தரும்.
ஆசிரியர் எப்போதும் மாணவர்களிடம் கவனம் செலுத்த வேண்டிய மிக முக்கியமான விடயம் மாணவரின் ஒழுக்கக் கடப்பாடு ஆகும். ஒழுக்கம், கட்டுப்பாடு பற்றிய கல்வியை பாடசாலை பருவத்திளேயே மாணவர்களிடத்தில் வழங்க முடியும் அந்நவகையில் இச் செயற்பாடானது வகுப்பறையில் ஒவ்வொரு ஆசிரியரினதும் கட்டாய கடமையாகின்றது. ஒழுக்காற்று செயல் தொடர்பாக ஆசிரியருக்கும் மாணவருக்குமிடையே தற்காலத்தில் முரண்பட்ட தன்மையே காணமுடிகிறது.
பொருத்தமான முறையினை கையாண்டு ஒழுக்க கல்வியை மாணவர்களுக்கு வகுப்பறையில் வழங்குவது கட்டாயமானது. அப்போதுதான் எதிர்காலத்தில் ஒழுக்கசீலமான சமுதாயத்தை உருவாக்க முடியும். ஆசிரியரானவர் மாணவர்களை எப்போதும் ஊக்கப்படுத்துதல் வேண்டும். மாணவர்கள் கற்றல் சார்ந்த விடயங்களில் ஈடுபடுவதற்கான காலம் மற்றும் சக்தி ஆகியவற்றை ஊக்கலே தீர்மானிக்கின்றது.
வகுப்பறையில் மாணவருக்கான ஊக்குவிப்பினை வழங்கும் போது மாணவர்களின் கல்விப் பணிகளில் ஆர்வத்தை தூண்டுதல், கற்கும் விடயங்களுக்கான பின்னூட்டல், மாணவரின் தன் நம்பிக்கையை வளர்த்தல், மாணவரின் சுய கற்றல் திறனை அதிகரித்தல், மாணவரின் துணிவாற்றலை ஊக்குவித்தல் போன்றனவற்றிகற்கு துணையாக அமையும் என புரோபி என்பவர் கூறுகின்றார்.
சுதந்திரமாகக் கற்றல், கூட்டுக்கற்றல், கற்பித்தல் சாதனங்களைப் பயன்படுத்துதல், குறிப்பாக கற்பித்தல் நுட்பங்களை பயன்படுத்துதல், சுயச்சிந்தனையை வளம்படுத்துதல் ஆகியவற்றை வகுப்பறையில் மாணவர்களுக்கு ஒழுங்கமைக்கும் ஒவ்வொரு ஆசிரியரும் வகுப்பறையில் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டில் ஆர்வத்தினை தூண்டுபவராக செயற்படுவர். வகுப்பறை முகாமைத்துவத்தினை உயரிய மட்டத்தில் பேணுபவராகவும் விளங்குவார்.
மாணவர்கள் தொடர்பாக ஆசிரியர்கள் எடுக்கின்ற தீர்மானங்கள் வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் செல்வாக்குச் செலுத்துகின்றன. நீண்டகாலச் சேவையும் அனுபவமும் கொண்ட ஆசிரியர்கள் கூட மாணவர்களைப் பார்க்கும் போது அவர்களுடைய புறத்தோற்றத்தினைக் கொண்டு வகைப்படுத்தி வருகின்றனர். நீண்டகால அவதானமும் அடிப்படைத் தகவல்களும் இன்றி மாணவர்களை வகைப்படுத்துதல் தவறான முடிவுகளுக்கு இட்டுச் செல்லும் என்பதை ஆசிரியர்கள் உணர வேண்டும்.
மாணவன் படிக்கமாட்டான், பெற்றோரும் படிப்பறிவு அற்றவர்கள், கல்விபற்றி பெற்றோருக்கு ஒன்றும் தெரியாது, அவன் வாழும் சூழல் சரியில்லை என்ற காரணங்கள் பலவற்றைக் கூறி மாணவர்களின் கல்விசார் முயற்சிகளுக்குத் தடைபோடும் ஆசிரியர்களைப் பாடசாலைகளில் சாதாரணமாகக் காணலாம். பணக்காரப் பிள்ளைகளுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு சில ஆசிரியர்களையும் காணக்கூடியதாக உள்ளது. இவ்வாறான எண்ணங்கள், பிரிவினைகளுடனும் வகுப்பறைக்குச் செல்லும் ஆசிரியர்கள் எல்லா மாணவர்களையும் ஒன்றாக அவதானிக்காமல் செயலாற்றுகின்றனர்.
மாணவர்களுடன் ஆசிரியர் பேசுகின்ற முறைமை, அவருடைய உடை,நடை,மொழி, அசைவுகள், நடுவு நிலையுடன் செயற்படுதல், மகிழ்ச்சிகரமாக பேசுதல் என்னும் விடயங்களில் கவனம் செலுத்துவதில்லை. தேவையின்றி மாணவரை பேசுதல், அச்சுறுத்துதல், சுயக்கட்டுப்பாட்டினை இழந்து பொறுத்தமற்ற தண்டனையை வழங்குதல், நம்பிக்கை இழப்பு போன்றவற்றால் அநேகமான பாடசாலைகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கிடையிலான உறவு நிலை பாதிக்கப்படுகின்றது. இந் நிலைமைக்கு காரணம் ஆசிரியர் மாணவர்களிடம் காட்டுகின்ற வேறுபாட்டுத் தன்மையேயாகும்.
நகர மற்றும் கிராமப்புறங்களில் பாடசாலைக்கு வருகைத்தர மறுக்கும் நடத்தைக் கோலமும் மாணவர்களிடையே உள்ளது. இவை வகுப்பறையில் அல்லது பாடசாலையில் இடம்பெறும் சில நிகழ்வுகளில் இருந்தே என்பதை நாம் ஊகிக்கலாம். ஆசிரியரின் அச்சுறுத்தல்கள் மற்றும் தண்டனைகளாலும் இவை தோன்றலாம். ஆசிரியரின் செயலின் காரணமாக ஒரு பிள்ளை பாடசாலைக்கு வரவில்லையென வெளிப்படையாகக் கூறுவானானால் ஆசிரியர் தனது கல்வியில் அவர் கற்றுக்கொண்ட உளவியல் மற்றும் ஆலோசனை கூறுகலால் எவ்வித பயன்களும் கிடைக்கவில்லை என்பதோடு, ஒரு மாணவனின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகின்றனர் என்றே கூறவேண்டும்.
பல்கலைக்கழகங்கள், ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் வழங்கும் கல்விசார் பாடங்களும், பயிற்சிகளும் தனிப்பட்ட முiறியில் ஆசிரியர்களின் தகைமைகளை அதிகரிக்கவும், பதவி உயர்வுகளுக்கும், ஊதிய அதிகரிப்பிற்கும் பயன்படுகின்றனவே தவிர மாணவர் மேம்பாடு குறித்துப் பயன்படுத்தப்படுவது மிகவும் குறைவு. உயர்தொழிலாகக் கருதப்படும் ஆசிரியர் தொழிலை இறுதிப் புகலிடமாக கருதி அத்தொழிலுக்கு வந்து சேர்ந்த பின்னர், இவர்கள் பெற்றுக்கொண்ட கல்வியையும், பயிற்சியையும் உணர்வுப்பூர்வமாக மாணவர் மேம்பாட்டிற்காக வினைத்திறனுடன் பயன்படுத்தும் விருப்பினையும், ஆர்வத்தினையும் விருத்தி செய்துகொள்ள வேண்டும்.
ஆகவே இங்கு குறிப்பிட்ட விடயங்களினைக் கருத்திற்கொண்டு பாடசாலையிலும் வகுப்பறையிலும் ஆசிரியர்கள் செயற்படுவார்களானால் மாணவரின் கற்றல் மேம்படுவதோடு ஆசிரியருக்கும் மாணவர்களுக்கிடையிலான உறவு ஒரு உன்னத நிலையை அடையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
0 கருத்துகள்